Get it on Google Play
Download on the App Store

ii. அரண்மனையும் ஆவணங்களும்

 

 

←i. சேதுபதி மன்னரது நடைமுறைகள்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. அரண்மனையும் ஆவணங்களும்

iii. அரண்மனை நடைமுறைகள்→

 

 

 

 

 


418958சேதுபதி மன்னர் வரலாறு — ii. அரண்மனையும் ஆவணங்களும்எஸ். எம். கமால்

 

 

II அரண்மனையும் ஆவணங்களும்
இராமநாதபுரம் அரண்மனை
மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றின் நாயகர்களான சேது மன்னர்களும் ஜமீன்தார்களும் தங்களது தலைமையிடமாகவும் இருப்பிடமாகவும் அமைந்திருந்தது இராமநாதபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள அரண்மனையாகும்.
இராமநாதபுரம் கோட்டை முதலில் மண்ணால் அமைக்கப்பட்டு இருந்தது என்ற தொன்மையான செய்தி கி.பி. 12ஆம் நூற்றாண்டில் மதுரை மண்டலத்தின் மீது படையெடுத்து வந்த இலங்கைப் படையெடுப்பினைப் பற்றிய இலங்கை வரலாற்று நூலில் காணப்படுகிறது.[1] இந்தக் கோட்டை கி.பி. 1678 வரையான காலகட்டத்தில் போகலுரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சேது மன்னர்கள் சில காலம் இதனைப் பயன்படுத்தினர். இதற்கு ஆதரவாக இராமநாதபுரம் தென்மேற்கு மூலையில் கூத்தன் சேதுபதியினால் அமைக்கப்பட்ட கூரிச்சாத்தனார் ஆலயத்தையும் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி அமைத்த சொக்கநாத கோயிலையும் அரண்மனையின் மையப் பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி அமைத்த இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் குறிப்பிடலாம். இந்த மண் கோட்டையையும் இதனுள் அமைந்திருந்த அரண்மனையையும் அகற்றிவிட்டு இராமநாதபுரம் கோட்டையையும் அரண்மனையையும் அமைத்தவர் ரெகுநாத கிழவன் சேதுபதி ஆவார். இந்தக் கற்கோட்டையைப் பின்னால் வந்த சேது மன்னர்களும் ஜமீன்தாரர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளை அமைக்க பெரிதும் உதவியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் என்ற கீழக்கரை வணிக வேந்தர் ஆவார் என்ற செய்தி இராமநாதபுரம் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கோட்டை ஒரே ஒரு தரை வாயிலுடன் செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட கற்சுவர்களால் அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் அரண்மனையில் சேது மன்னரும் அவரது அரச பிராட்டிகளும் தங்குவதற்கு ஏற்ப பல அறைகள் கொண்ட மண்டபங்களையும் சேது மன்னர் கொலு வீற்றிருப்பதற்கான அத்தாணி மண்டபத்தையும், ஆயுதச் சாலையையும் அமைத்ததுடன் இராமநாதபுரம் அரண்மனையின் அன்றாட அலுவல்கள் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளையும் சீதக்காதி மரைக்காயர். மன்னருக்கு வகுத்துக் கொடுத்தார். மேலும் மன்னர் நீராடுவதற்கு என்று அத்தாணி மண்டபத்தின் வடபகுதியில் நீராடுவதற்கான நீச்சல் குளம் ஒன்றையும் அமைத்து இருந்தார். இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேக்கமான முகவையூரணியிலிருந்து இந்த நீச்சல் குளத்திற்கு நீர் வசதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஜமீன்தார்களின் ஆட்சியின் பொழுது இந்த நீச்சல் குளம் பயனற்றதாகச் செய்யப்பட்டது. அண்மைக்காலம் வரை அந்தப் பகுதி பூப்பந்து விளையாடும் இடமாக இருந்து வந்தது. கி.பி. 1772-ல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி ஜோசப் ஸ்மித் இந்த அரண்மனையின் அழகினைத் தமது அறிக்கையில் பதிவு செய்திருந்தார். அவரைப் போன்றே கி.பி. 1796-ல் இங்கு வருகைதந்த சென்னை தளபதி ஜெனரல் பேட்டர்சன் இராமநாதபுரம் அரண்மனையின் அமைப்பு பற்றிய முழு விவரங்களையும் தமது பயணக் குறிப்பில் வரைந்து வைத்துள்ளார்.[2][3]
ஜமீன்தார்களது ஆட்சியில் இந்த அரண்மனையின் நுழைவாயிலை ஒட்டிய இரு பகுதிகளிலும் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டன.
மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் காலத்தில் இராமலிங்க விலாசம் அரண்மனையை அடுத்து வட பகுதியில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையையும் அமைத்துப் பொதுமக்கள் அதனைக் கண்டு களிக்கச் செய்யப்பட்டது. அந்த மிருகக் காட்சி சாலையில் மான்கள், புலி, மலையாடுகள் இருந்த விபரம் அவரது 1893-ஆம் ஆண்டு நாட்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. இவரது மைந்தரான இராஜ ராஜேஸ்வர முத்து ராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசத்தின் கிழக்கே உள்ள அரண்மனை மதிலை அகற்றி விட்டு ஒரு அழகிய புதிய நுழைவாயில் ஒன்றை அமைத்தார். இன்றும் அந்த வாயில் ‘போலீஸ் கேட்” என்ற பெயருடன் பயன்பட்டு வருகிறது. இந்த மன்னர் இராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்கு மேற்கிலும் அந்தப்புரத்திற்கு கிழக்கிலும் இடைப்பட்ட இடத்தில் கல்யாண மஹால் என்ற புதிய கட்டிடத்தையும் அதற்கு எதிரே சரஸ்வதி மகால் என்ற நூலகக் கட்டிடத்தையும் அமைத்தார். இவைகளைத் தவிர இந்த அரண்மனைப் பகுதியில் ஜமீன்தாரர் ஆட்சியில் எந்த அமைப்புகளும் நிர்மாணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணங்கள்
ஏறத்தாழ 12-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வந்துள்ள சேது மன்னர்களது ஆட்சி பற்றிய அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆதலால் கள்ளர் சீமை கானாட்டு திருமெய்யத்திலும், பின்னர் சாலை கிராமத்தை அடுத்த விரையாத கண்டனில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நீடித்த இந்த மன்னர்களது ஆட்சியினைப் பற்றிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை போகலூரிலும், இராமநாதபுரத்திலும் நிலைத்திருந்த சேது மன்னர்களது ஆட்சியைப் பற்றிய விவரங்களை அறிவதற்குக் கீழ்கண்ட ஆவணங்கள் மட்டும் பயனுள்ளவையாக அமைந்து விளங்குகின்றன.

. Old Historical Manuscripts by Taylor Vol II (1841)
. Manual of Madura Country by A. Nelson (1861)
. Manual of Ramnad Samasthanam by Raja Ram Rao (1891)
. இராமநாதபுரம் நிலமான்ய ஒலைக் கணக்கு (1810)
. Tamil Nadu Archives Records from 1772 AD
. Diary of General Patterson (1796) - London Museum
. இராமப் பையன் அம்மானை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு
. கான்சாயபு சண்டை - (நாட்டுப்புற இலக்கியம்)
. Records of outer East India Company (Calonial Archives the Hague) 10. Record of English East India Company
11. Topographical list of inscriptions 1906, Vol II by K.V. Rangacharya
இவை தவிர கி.பி. 1604 முதல் 1792 வரை சேது மன்னர்கள் வழங்கிய சர்வமான்ய சாசனங்களான செப்பேடுகளும் கி.பி. 1622 முதல் 1898 வரையிலான கால அளவில் சேது மன்னர்கள் வெட்டுவித்த கல்வெட்டுகளும் ஆகும். இந்த ஆவணங்களில் சேது மன்னர்களது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. எடுத்துக்காட்டாக திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் கி.பி. 1674லும், கி.பி. 1678லும் நிறைவுபெற்றதாக சில ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். உண்மையில் அவரது ஆட்சிக்கால முடிவு கி.பி. 1676 ஆகும். மேலும் இந்த மன்னர் சேதுபதி பட்டம் சூட்டிக் கொண்டபோது கூத்தன் சேதுபதியின் மகன் தம்பித் தேவர்க்காக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தலையிட்டுச் சேது நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்குமாறு வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகப் பிரிவினை செய்யப்பட்ட சேது நாட்டில் காளையார் கோவில் பகுதியைத் தம்பித் தேவர் தலைமையிடமாகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்துள்ளார். இதனைப் போன்றே இன்னொரு பகுதியான அஞ்சுகோட்டை பகுதியை நாராயணத் தேவர் மகன் தனுக்காத்த தேவர் சில காலம் ஆட்சி செய்ததையும். மேலே கண்ட நூல்கள் குறிப்பிடத் தவறிவிட்டன.
இன்னொரு செய்தி, ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1710-ல் மரணமடைந்ததும் அவரது தங்கையின் மகனான திருவுடையாத் தேவர் என்பவர் சேதுபதிப் பட்டத்தினைப் பெற்றார் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் திருவுடையாத் தேவர் என்ற முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1710-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவரது தமையனார் முத்து வயிரவநாத சேதுபதி கி.பி. 1710-லேயே சேதுநாட்டின் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்தார் என்பதை அவரது கி.பி. 1710. கி.பி. 1712 ஆண்டைச் சேர்ந்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1713-ல் தான் சேது நாட்டின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது. கி.பி. 1713-ல் இந்த மன்னர் வழங்கிய முதல் செப்பேடும் இதை உறுதி செய்கிறது. இந்த மன்னரது மரணம் பற்றிய சரியான ஆண்டு இந்த நூல்களில் காணப்படவில்லை. இதனைப் போன்றே கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கரத் தேவர் கி.பி. 1725-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து கி.பி. 1727 வரை ஆட்சி செய்ததைப் பற்றிய செய்திகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த மன்னர் திருக்கோயில்களுக்கு வழங்கிய தானங்களில் கி.பி. 1727-ல் நயினார் கோயிலுக்கு வழங்கப்பெற்ற அண்டகுடித் தானம் பற்றிய கல்வெட்டு மட்டும்தான் கிடைத்துள்ளது. இவைகளை விட இன்னும் சிறப்பு வாய்ந்த தொன்மை ஆவணங்களைப் போர்த்துகீசியர் சேது மன்னர் கடிதப் போக்குவரத்து, யாழ்ப்பாணம், தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் நிலை கொண்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது உடன்படிக்கைகளும் கி.பி. 1772 - 1794 வரையான கால அளவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் சேது மன்னருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து ஆகியவை சேதுபதிச் சீமை வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கூட நமக்குக் கிடைப்பதாக இல்லை. இராமநாத சமஸ்தான நிர்வாக அலுவலர்களது அசிரத்தையாலும், பொறுப்பற்ற தன்மையாலும் இவை முழுவதும் அழிந்து விட்டன.
இவைகளைப் போன்றே கிழவன் சேதுபதியின் மனைவியான காதலி நாச்சியார் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடை பற்றியும் மேலச்சீத்தை கிராம அறக்கொடை, தனுஷ்கோடி சத்திரத்திற்கு வழங்கிய களத்துர் அறக்கொடை. எம்மண்டலமுங் கொண்டான் என்ற ஊரில் அமைத்து இருந்த அன்னசத்திரம் பற்றியும் ராணி மங்களேசுவரி நாச்சியார் வழங்கிய அறக்கொடைகளைப் பற்றியும் விவரம் அளிக்கப்படவில்லை.
கி.பி. 1678 வரை ஆட்சி செய்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்கு வாரிசு இல்லை என மேலே கண்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயில் கட்டி முடித்த இரண்டாவது பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் உள்ள சுவாமி சன்னதி பக்கத்தில் அவரும் அவரின் இளவலும் நிற்பதாக சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இது அவரது மைந்தன் என நினைவுபடுத்துகிறது. இதனைப் போன்றே கி.பி. 1710-ல் கிழவன் ரெகுநாத சேதுபதி மன்னர் வாரிசு இல்லாமல் மரணம் அடைந்ததால் அவரது தமக்கை மகன் (திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன்) சேதுபதியாக அரியணை ஏறினார் என வரையப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மன்னருக்கு இரணசிங்கத்தேவன் என்ற ஒரு மகன் இருந்தான் என்பதும் அவன் சேதுநாட்டின் வடபகுதியான கல்வாசல் நாட்டின் அரசப் பிரதிநிதியாக அமர்ந்திருந்தார் என்பதைக் காட்டு பாவாசாகிபு பள்ளிவாசல் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த விபரங்களை இராமநாதபுரம் மேனுவல் ஆசிரியர் கூட வரைவதற்குத் தவறிவிட்டார். கி.பி. 1803 முதல் 1812 வரை சேது நாட்டின் முதல் ஜமீன் தாரிணியாக பொறுப்பேற்றிருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அண்ணாசாமி என்ற சிறுவனைச் சுவிகாரம் செய்துகொண்டார் என மேனுவல் குறிப்பிடுகிறது. இந்த இராணியார் சேசம்மாள் என்ற பெண்ணைச் சுவீகரித்திருந்தும் அவரது புண்ணியமாக திருப்புல்லாணி, அகத்தியர் கூட்டம், சீனிவாசப் பெருமான் ஆலயத்திற்கு நெடிய மாணிக்கம் என்ற கிராமத்தைச் சர்வமான்யமாக வழங்கிய செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.
இன்னொரு செய்தி இராமநாதபுரம் ஜமீன்தார் இராமசாமித்தேவர் கி.பி. 1730-ல் மரணமடைந்தார். அவரை அடுத்து ஜமீன் பொறுப்பு ஏற்றிருந்த இராணி முத்து வீராயி நாச்சியார் சிவசாமி சேதுபதி என்ற இளைஞரைச் சுவீகாரம் செய்துகொண்டு அவரை இராமநாத புரம் ஜமீன்தாராக அறிவித்தார். இந்த சேதுபதி மன்னர் மீது அட்டாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயர் ‘சேதுபதி விறலிவிடு துது’ என்ற சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். இந்தச் செய்திகளைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இராமநாதபுரம் மேனுவலில் காணப்பட வில்லை.
சேதுபதி மன்னர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை மணந்து இருந்தனர். இதனை வலியுறுத்தும் வகையில் கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித் தேவருக்குச் சேதுபதி பட்டம் கிடைக்காததால் அவர் சேதுநாட்டில் குழப்பம் விளைவித்தார். அவர் மதுரை திருமலை நாயக்க மன்னரை இந்த விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு நிர்பந்தித்ததுடன் சேதுநாட்டை கி.பி. 1642-ல் மூன்று பகுதிகளாகப் பிரித்து மூன்று மன்னர்கள் (தம்பித்தேவர் உட்பட) ஆளும்படி செய்தார். ஆதலால் சேது மன்னர்கள் எந்த நாட்டுத் தலைவரது பெண்மக்களை மணந்து இருந்தனர் என்பதும், அவர்களது பெயர்கள் என்ன என்பதும் இந்த ஆவணங்களில் குறிக்கப்படவில்லை.
இத்தகைய சேது மன்னர்களது வரலாற்று நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு இந்த ஆவணங்கள் தவறி விட்டதால் இந்த மன்னர்களது நெடிய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 


↑ Paranavittna. Dr. S. Nicholson - Concise history of ceylon (1952)

↑ Tamil Nadu Archives Military Consultation Vol 42-B 8-6. 1772, b-410.

↑ London Prince of Wales Library - Diary of General Patterson (In Manuscript)

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு